இயேசு அவதாரத் திருநாள் வாழ்த்துக்கள்!
அண்ணல் இயேசு அவதரித்த
அற்புதத் திருநாளாம் இன்று
அகில உலக மக்களெல்லாம்
அன்புகொள்ளும் பெருநாளாம் இன்று !
ஆட்டிடையன் அன்பையும் கூட
ஆனந்தத் தோடே ஏற்றிட்ட
ஆன்மபல மிக்கோன் எங்கள்
ஆயர்குல ஒளிவிளக்கு இயேசு !
இன்றைய உலகமதில் உள்ளயாவரும்
இன்பமுடன் வாழ்ந்திடவே ந்ல்ல
இன்னமுதத் தோத்திரங்களை எங்களுக்கு
இனிமையாகத் தந்தவர் இயேசு !
ஈரமான நெஞ்சுடனே என்றும்
ஈகைத் தன்மையதனைக் கொண்டே
ஈனமான மனதைக் கொண்டோரையும்
ஈன்றதாய் போல்காப்பவர் இயேசு !
உலக உத்தமர் வரிசையதில்
உயர்ந்த இடமும் பெற்றிட்டே
உள்ளும் புறமும் அனைவரிடமும்
உண்மையை விரும்பிடும் இயேசு !
ஊக்கத் தோடே யார்வந்து
ஊழியம் செய்திட விரும்பினாலும்
ஊருக்காக உழைத்திட வேண்டி
ஊதல்ஊதியே அழைப்பவர் இயேசு !
எங்கும் நிறைந்த பேரொளியாய்
எவர்க்கும் உதவிடும் பருவமழையாய்
எப்போதும் மக்களைக் காத்திடும்
எங்கள் அண்ணலே இயேசு !
ஏற்றம் ஒன்றே குறிக்கோளாய்
ஏணிப்படியே வாழ்வின் துவக்கமாய்
ஏற்றுக் கொள்ளும் யாவரையும்
என்றும் காப்பவர் இயேசு !
இவண்
கவி.செங்குட்டுவன்
ஊத்தங்கரை - 635207
அலை பேசி: 9842712109
Friday, December 21, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment