Sunday, June 26, 2022

அனைவரும் கற்க கல்வி…..


அறியாமை என்னும் அகத்தின் இருளை

தெரியாமை என்னும் புறத்தின் அழுக்கை

புரியாமல் கூட காத்திட வேண்டாம்

வெறியோடு சாய்த்திடுவோம் அரிய கல்வியாலே…..

 

            கல்லாமை இருளை இல்லாமை ஆக்கிடவே

            வெள்ளாமை முழுதையும் விலையாய் கொள்வோம்

            கொல்லாமை நெறியைப் போற்றுதல் போலே

            எள்ளாமை பண்பை என்றும் காப்போம்…..

 

மனிதப் பிறவியின் மகத்துவம் காத்திட

மனிதாபிமானச் செயல்கள் செய்வோம் நாளும்

மக்கள் யாவரும் சகோதர் என்பதை

மனதில் நினைத்தே வாழ்வோம் என்றும்…….

 

            அன்பும் அறமும் அகத்தின் பன்பென

            அனைவரும் அறிந்திட உரைப்போம் என்றும்

            அன்னைத் தமிழின் மொழிகள் யாவும்

            என்னை உயர்த்தும் என்றே சொல்வோம்…..

 

ஊரும் உயர உலகம் தழைக்க

உண்மைத் தன்மையை பேணுவோம் என்றும்

பொய்மை என்னும் பொல்லாத சொல்லை

பொசுக்கியே படிப்போம் அகராதி தன்னிலே….

 

            கல்வி என்னும் ஆயுதம் கொண்டே

            கள்ளி எடுப்போம் அறிவின் ஊற்றை

            சொல்லிச் சொல்லியே சொக்க வைப்போம்

            வெள்ளிச் சலங்கையின் ஓசையைப் போலே…..

ஆர்கலி உலகு....

 


ஆர்கலி உலகத்து மக்கள் எல்லாம்
ஆர்ப்பாட்டம் ஏதும் இன்றியே இங்கு
அன்றாட வாழ்வை நடத்தி வந்தால்
அன்பு என்னும் ஊற்று பிறக்குமே...

போட்டி பொறாமை என்னும் பண்பு
வாட்டி வதைக்கும் போதிலே நீயும்
ஈட்டி கொண்டே முன்னேறிச் சென்றால்
வேட்டியும் கூட தங்காது உன்னிடம்....

நல்லோர் நட்பை நாளும் வளர்த்தே
அல்லோர் தொடர்பை அறவே விட்டு
வல்லோர் உறவை வளமாக்கிக் கொண்டால்
சொல்லேர் உழவராய் கோலோச்சலாம் உலகிலே....

கற்றோரும் மற்றோரும் நிறைந்த  உலகில்
உற்றாரும் உறவினரும் சேர்ந்துள்ள உலகில்
ஒற்றுமை என்னும் பேராயுதம் கொண்டே
ஒப்புரவு ஒழுகியே வாழ்வோம் உலகில்.....